Monday, August 8, 2016

மஞ்சள் பூக்களைப் பறிப்பவள்


மஞ்சள் பூப்போட்ட பாவாடையும்
 இளம்மஞ்சள் நிறத்திலான தாவணியும்
அணிந்திருக்கும் அவள்
பாவாடைதையை மடித்து கோணியாக்கி
மஞ்சள் ரோஜா சாமந்தி சூரியகாந்தி என
மஞ்சள்நிறப் பூக்களை பறிக்கத்துவங்கினாள்.

அவள் மஞ்சள் நிறப்பூக்களை மட்டும் பறித்ததால்
வனம் மஞ்சள் நிறத்தை இழந்து  வெறுமை கொண்டது
வனமெங்கும் மஞ்சள் நிறப்பூக்களை தேடி அலைந்தும்
மடி நிறையாத அவள்
இறுதியாய் அந்தி வானத்திலிருந்த 
பருதிப்பூவை பறித்து மடியிலிட்ட
ஒளியிழந்து வானம் இருள் கொண்டது.

இரவெல்லாம் மஞ்சள் பூக்களை 
தொடுத்துக்கொண்டிருந்த அவள்
அதை மாலையாக்கி அணிந்து கொண்டபோது
 அவளுக்கு பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்த
 இளம் மஞ்சள் நிறத்திலான சிறகுகள் முளைத்தன.
 அவள் ஒளிப்பறவையாகி சிறகசைத்த போது
வைகறையில் பருதிப்பூ மலர்ந்து கொண்டிருந்தது.

- தென்பாண்டியன்.

ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதை

No comments:

Post a Comment