Monday, August 1, 2016


நிறங்களானவள்

---------------------
எனக்கு பிரியமான
நிறங்களிலான ஆடையை
எப்போதும் அணிந்து வரும் நீ

நேற்று மரகதப்புறாவின்
கழுத்து நிறத்திலான ஓர் ஆடையை
அணிந்து வந்திருந்தாய்.

இன்று கானல் நீரின் சிற்றலை போல்
மின்னும் ஒரு பட்டாடையை
அணிந்து வந்திருக்கிறாய்.

நாளை இப்பேராகாயத்தை
உள்வாங்கி பிரதிபளிக்கும்
நீலக்கடல் நிறத்தில் ஓர் ஆடையை
நீ அணிந்து வரக்கூடும்.

நிறங்களுக்குள் மிதந்தும் மறைந்தும்
கரைந்து விட்ட உன்னை
ஒரு கித்தானில் வடித்தெடுத்த போது
ஆடைகளற்ற பிம்பமாய் எஞ்சி இருக்கிறாய்.

இப்போது எனக்கு பிரியமான நிறங்களில்
ஓர் ஆடையை உனக்கு
வரைந்து கொண்டிருக்கிறேன்.
***
(ஆனந்த விகடனில் வெளி வந்துள்ள என் கவிதை)


தென்பாண்டியன்

No comments:

Post a Comment