Wednesday, August 10, 2016


பூனை வீடு


இசையால் நிரம்பியதிரும்
அந்த வீடு பூட்டியிருக்கிறது

எதேச்சையாக பியானோ மீது
தாவி  நடக்கத்துவங்கிய
பூனையின் கால்கள்
இசை வயப்பட்டு மீண்டும் மீண்டும்
நடக்கிறது





மின்சாரம் துண்டிக்கப்பட்ட மழையிரவில்
அசைவற்று கண்கள் ஒளிர
பூனை அமைதி கொள்கிறது

மழை நின்று
குளிர்ந்து புலரும் ஈரவிடியலில்
கண்களயர்ந்து பூனை 
உறங்குகிறது

சன்னலிடையே உள்நுழையும்
வெயிலில்
தூசியகன்ற பியானோக் கட்டைகள் 
பளிச்சிடுகின்றன.



-  தென்பாண்டியன்.

( உயிர் எழுத்து இதழில் பிரசுரமான கவிதை) 

வனம் பெருகுதல்

....
முன்பொரு காலத்தில்
இப்பெரும் தேசத்தின் 
இளவரசானாய்  இருந்தேன்

தரையிறங்கிய துஷ்ட தேவதைகள்
என் தேசத்தை வென்றெடுத்த போது
என் நாட்டின் பிரஜைகள்
பறவைகளாகவும்
தோல்வியுற்ற எனது சேனைகள்
மரங்களாகவும் சபிக்கப்பட்டனர்

தேசமிழந்து வனமெங்கும்
தனிமை கொண்டலையும்  நான்
வெட்டப்படாத மரங்களால்
வனங்கள் பெருகவும்
வேட்டையாடப்படாத பறவைகளால்
வானம் நிறையவும்
என் பழங்கடவுளை வேண்டி நிற்கிறேன்.

- தென்பாண்டியன்
















Tuesday, August 9, 2016

அரூப நடனம்


கொடியில் உலரும்
குழந்தைகளின் ஆடைகளை
அணிந்து கொண்டு
நடனமிடுகிறது காற்று


காற்றின்  அரூப உடல்  மொழியில்  
சுழலும் ஆடை  
குழந்தையாகி குதுாகலிக்கிறது


பெண் குழந்தைகளின்
பிரில் வைத்த பாவாடைகள்
காற்றின் உடலுக்கு
கச்சிதமாய் பொருந்திப் போக

நிசப்தமாய் நிழ்ந்து கொண்டே இருக்கிறது அதன் நடனம்

.....
- தென்பாண்டியன்
( குமுதம் திராநதி பிரசுரமானது )

Monday, August 8, 2016

மஞ்சள் பூக்களைப் பறிப்பவள்


மஞ்சள் பூப்போட்ட பாவாடையும்
 இளம்மஞ்சள் நிறத்திலான தாவணியும்
அணிந்திருக்கும் அவள்
பாவாடைதையை மடித்து கோணியாக்கி
மஞ்சள் ரோஜா சாமந்தி சூரியகாந்தி என
மஞ்சள்நிறப் பூக்களை பறிக்கத்துவங்கினாள்.

அவள் மஞ்சள் நிறப்பூக்களை மட்டும் பறித்ததால்
வனம் மஞ்சள் நிறத்தை இழந்து  வெறுமை கொண்டது
வனமெங்கும் மஞ்சள் நிறப்பூக்களை தேடி அலைந்தும்
மடி நிறையாத அவள்
இறுதியாய் அந்தி வானத்திலிருந்த 
பருதிப்பூவை பறித்து மடியிலிட்ட
ஒளியிழந்து வானம் இருள் கொண்டது.

இரவெல்லாம் மஞ்சள் பூக்களை 
தொடுத்துக்கொண்டிருந்த அவள்
அதை மாலையாக்கி அணிந்து கொண்டபோது
 அவளுக்கு பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்த
 இளம் மஞ்சள் நிறத்திலான சிறகுகள் முளைத்தன.
 அவள் ஒளிப்பறவையாகி சிறகசைத்த போது
வைகறையில் பருதிப்பூ மலர்ந்து கொண்டிருந்தது.

- தென்பாண்டியன்.

ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதை

Wednesday, August 3, 2016


குளம்

தவளைகள் மீன்கள் 
தண்ணீர் பாம்புகள்  
இன்னும் பிற நீர் வாழ் 
உயிரினங்கள் ஜீவித்திருக்கும் 
குளத்தில் 
பாசிகளும் நீர் தாவரங்களும் 
படர்ந்திருக்கின்றன...!


எதை வீசி எரிந்தாலும் 
உள்ளே இழுத்துக்கொண்டு 
நேர்த்தியான நீர் வளையங்களை 
காட்சிப்படுத்தும் குளம் 
நெகிழி பொருட்களை மட்டும் 
வெளியே தள்ளி மிதக்கவிடுகிறது.                                                          

– தென்பாண்டியன்
/ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை /
















Tuesday, August 2, 2016


சருகுகளின் சப்தம்



இலையுதிர்ந்த மரக்கிளையில் 
தனித்து அமர்ந்திருக்கும் 
பறவையின் மௌனம்
இப்பிரபஞ்சத்தை அச்சுறுத்துகிறது.

இயற்கை சமன்குலைந்த 
இவ்வுலகில்
காலத்தின் நுண்ணடுக்குகளில்
அரூபமாய் மறைந்திருக்கும் 
பேரழிவு ரகசியங்களை 
பறவைகள் அறிந்திருக்க கூடும்.

வேர் நுனிகளுக்கு எட்டாத ஆழத்தில்  
உள்வாங்கி விட்ட
நிலத்தடி நீரை நோக்கி 
உலர்ந்த வேர்களை நீட்டும்
தாகித்த மரங்களில் இருந்து
உதிரும் சருகுகளின் சப்தத்தில் 
வறட்சியின் குரூரம் ஒலிக்கிறது.

சற்றும் எதிர் பாரத கணத்தில்
ஈரவாடை  வீசும் திசையை நோக்கி 
பறந்து செல்கிறது அப்பறவை. 


- தென்பாண்டியன்,













இறகு பேனா


கடவுளின்
மேசையின் மீது இருக்கும்
மைப்புட்டியில் உள்ள இறகுப்பேனா
எந்தப்பறவையுனுடையது என
தெரியவில்லை.


எவர் கண்களுக்கும் புலப்படாத
அரூப லிபியில் எழுதும் அவ்விறகில்
இவ்வுலகின் எல்லா நிறங்களும்
தென்படுகின்றன.

கடவுளை சந்திக்க நேர்ந்தால்
அப்பறவையின் பெயர் குறித்து
வினவவேண்டும்

அப்பெயர் அழிந்து வரும்
அரிய பறவைகள் பட்டியலில்
இருக்கக்  கூடும்.

-  தென்பாண்டியன்