Tuesday, August 2, 2016
Monday, August 1, 2016
பறவைகளை வழி நடத்துபவன்
வரைந்து முடித்ததும்
அது பறந்து விட்டது.
மீண்டும் ஒரு பறவையை
வரையத் துவங்கினேன்
வரைந்து முடித்ததும்
அதுவும் பறந்து விட்டது.
நான் வரைந்து
கொண்டேயிருந்தேன்
அவைகள் பறந்து
கொண்டேயிருந்தன....
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைளும் வந்து
அமர்ந்து கொண்டன. !
---------------------------------------------------------
பறவை ஒன்றை
வரையத் துவங்கினேன்வரைந்து முடித்ததும்
அது பறந்து விட்டது.
மீண்டும் ஒரு பறவையை
வரையத் துவங்கினேன்
வரைந்து முடித்ததும்
அதுவும் பறந்து விட்டது.
நான் வரைந்து
கொண்டேயிருந்தேன்
அவைகள் பறந்து
கொண்டேயிருந்தன....
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைளும் வந்து
அமர்ந்து கொண்டன. !
………
- தென்பாண்டியன் .
துயரகணம்
-------------------
மனம் கசந்த பொழுதுகளில்
பெறப்படும் எவ்வித முத்தமும்
தித்திப்பதில்லை.
நிறமிழந்த துயரத்தை
கோடுகளும் புள்ளிகளுமின்றி
சித்திரமாக்குகையில்
பிசாசுகள் கண் விழிக்கின்றன
ஆலகாலம் தேங்கிய ஆழிப்பேராழத்தில்
மூழ்கி கிடக்கையில்
கிளிஞ்சலென கரையொதிக்கி
போகிறது அப்பேரலை.
– தென்பாண்டியன்
காலச்சுவடு இதழில் வெளியான கவிதை
-------------------
மனம் கசந்த பொழுதுகளில்
பெறப்படும் எவ்வித முத்தமும்
தித்திப்பதில்லை.
நிறமிழந்த துயரத்தை
கோடுகளும் புள்ளிகளுமின்றி
சித்திரமாக்குகையில்
பிசாசுகள் கண் விழிக்கின்றன
ஆலகாலம் தேங்கிய ஆழிப்பேராழத்தில்
மூழ்கி கிடக்கையில்
கிளிஞ்சலென கரையொதிக்கி
போகிறது அப்பேரலை.
– தென்பாண்டியன்
காலச்சுவடு இதழில் வெளியான கவிதை
சித்திரக்காரி
–––––––––
மகள் நல்ல சித்திரக்காரி
கோடுகளையும் வண்ணங்களையும்
நுட்பமாக இணைத்து சித்திரம் வரைய
கற்றுத்தேர்ந்திருக்கிறாள்.
அவள் பறவைகளை வரையும் போது
அகண்ட வானத்தையும்
அவை அமர்வதற்கேற்ற கனி மரங்களையும்
வரைந்து விடுகிறாள்
அவள் வரையும்
ஆறுகளிலும் குளங்களிலும்
நீர் வற்றுவதே இல்லை
நீர் பறவைகளை வரையும் போது
நீருக்குள் மீன்களையும் வரைந்து நீந்த விடுகிறாள்
நிலக்காட்சிகளை வரைய திட்டமிடும் போது
பசும் புல்வெளிகளை தீட்டிய பின்
கால்நடைகளை வரைந்து மேய விடுகிறாள்
அவள் வரைந்த கார்மேகங்கள்
பெரும் மழையாகி பெய்யும் போது
எல்லோரும் நனைகின்றனர்
அவள் யார் கையிலும்
குடை வரைந்து கொடுக்கவில்லை
*
– தென்பாண்டியன்
(காலச்சுவடு’ (01.05.2015) மே மாத இதழில்
வெளிவந்த என் இரண்டு கவிதை)
---------------------
எனக்கு பிரியமான
நிறங்களிலான ஆடையை
எப்போதும் அணிந்து வரும் நீ
நேற்று மரகதப்புறாவின்
கழுத்து நிறத்திலான ஓர் ஆடையை
அணிந்து வந்திருந்தாய்.
இன்று கானல் நீரின் சிற்றலை போல்
மின்னும் ஒரு பட்டாடையை
அணிந்து வந்திருக்கிறாய்.
நாளை இப்பேராகாயத்தை
உள்வாங்கி பிரதிபளிக்கும்
நீலக்கடல் நிறத்தில் ஓர் ஆடையை
நீ அணிந்து வரக்கூடும்.
நிறங்களுக்குள் மிதந்தும் மறைந்தும்
கரைந்து விட்ட உன்னை
ஒரு கித்தானில் வடித்தெடுத்த போது
ஆடைகளற்ற பிம்பமாய் எஞ்சி இருக்கிறாய்.
இப்போது எனக்கு பிரியமான நிறங்களில்
ஓர் ஆடையை உனக்கு
வரைந்து கொண்டிருக்கிறேன்.
***
(ஆனந்த விகடனில் வெளி வந்துள்ள என் கவிதை)
– தென்பாண்டியன்
Friday, July 29, 2016
உறக்கமிழந்தவன் இரவு
––––––––––––––––––––
நள்ளிரவில் தட்டப்படும்
அல்லது சாத்தப்படும்
கதவின் சப்தம்
ஒரு லயத்தோடு ஒலிக்கிறது.
பனியுறைந்த இருள் மீது
ஒளிரும் திங்கள்
அவ்விரவை சாம்பல் நிறமாய்
மாற்றுகிறது.
நிசப்தம் கலையாத சன்ன ஒலியுடன்
இரவுப் பறவைகள்
விரைகின்றன.
உறக்கமிழந்து தவிப்பவனின்
கூதல் மிகுந்த துயர கணங்கள்
விடியலற்று அலைகிறது.
தனிமையை
மேலும் தனிமையாக்கி
பெய்கிறது மழை.
ஒரு மலரை போல்
மணமுடையதாகவும்
ஒரு பறவையை போல்
விடுதலையுடையதாகவும்
இருப்பதில்லை வாழ்க்கை.
நீங்காத சாபத்தை போலவும்
பீதியூட்டும் மரணத்தை போலவும்
இருக்கிறது
………
(‘குமுதம் தீராநதி’ 2015 அக்டோபர் இதழில்
வெளிவந்துள்ள என் கவிதை...)
Subscribe to:
Posts (Atom)





